எளிய பாடல் ஒன்று எடுத்து ஏகடியம்,ஆபாசம் பேசி, பகுத்தறிவாதி என தெருகூத்து பகல் வேஷம் போடாதீர்!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, பகுத்தறிய வேண்டிய பாடல்பல இங்கிருக்க, கந்த சஷ்டிகவசம் என கலைநயம் இழைத்துச் செய்யப்பட்ட எழிலான எளிய பாடல் போன்றெடுத்து ஏகடியம்,ஆபாசம் பேசி, பகுத்தறிவாதி என தெருகூத்து பகல் வேஷம் போடாதீர், பகுத்தறிய வேண்டிய பாடல்களில் ஒன்று எடுத்து பகுத்தறிய வாருங்கள்
பகுத்தறிய, புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து ஒரு பாடல்
ஐந்து கதியும் பதினெட்டுச்சாரியையும்
கந்து மறமும் கறங்குளைமா - முந்துற
மேல்கொண்டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட பெண்ணாளை மீட்டு
ஐந்து கதியெனும் மனோவேகம், வாயுவேகம்,
ஒலிவேகம், ஒளிவேகம், அசுவவேகமாக அறிவை செலவிட்டு, கீழ்காணும் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் முன்னேறிச் சென்று மேம்பட்டவன், வெற்றியை குறிக்கும் வேல் கொண்டிருக்கும் வெற்றித் திருமகளை அடைவான். அவனே வீரன்
1) மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான், அது மதவெறி என்றாலும் கூட ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
2) காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.
3) குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
4) லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
5) மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6)வீண்பெருமை: அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது
7)அகந்தை: தான்என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8) சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9)ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது
10)தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11)ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12)மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்
13)அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்
14)கண்:ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15)காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்
16)மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17) நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18)மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை வணங்க வேண்டும்.
சகோதர சகோதரிகளே, எப்பாடலையும் நீங்கள் பகுத்தறிந்து விமர்சிக்கலாம், ஆனால் அதற்கு அப் பாடல் எழுதியவர் நிலையில் நீங்கள் இருந்து சிந்திக்க பழகுங்கள், அதுதான் பண்புடையவர்களுக்கு அழகு. பகுத்தறியும் முறை.
Comments
Post a Comment